டம்மி தீவிரவாதிகளுக்கு முஸ்லிம்களின் தொப்பி – சர்ச்சையில் குஜராத் போலீசார்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகளை பிடிக்கும் பயிற்சியில் தீவிரவாதிகளின் வேடம் அணிந்தவர்களுக்கு முஸ்லிம்களின் தொப்பியை அணிவித்திருந்தது பெரும் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.
தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்கள்தான் என்று சித்தரிக்கும் வகையில் போலீசார் நடந்து கொண்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பயிற்சி சூரத் காவல் துறையினரால் நடத்தப்பட்டது.இது அங்குள்ள உள்ளூர் டிவிக்களில் ஒளிபரப்பட்டதை தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த பயிற்சியில் காவல் துறையினர் அனைவரும் முன்னேற்பாட்டோடு இருப்பதை போலவும், இரு தீவிரவாதிகள் ஓடுவதை போலவும், அவர்களை டம்மி தோட்டக்களால் சுட்ட பிறகு காவல் துறையினர் கைது செய்வதை போலவும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
இதை பற்றி காவல் துறை அதிகாரி பிரதீப் செஜுல், "இது போல் 10 - 15 இடங்களில் நடந்துள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதை வேண்டுமென்றே யாராவது செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான மெஹபூப் அலி இதுகுறித்து கூறும்போது, காவல்துறை ஒரு இனத்தின் மீது தேவையில்லாமல் தீவிரவாத முத்திரை குத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.