‘நீ பக்கா இந்தியரா’.. ஏர்போர்ட்டில் அத்துமீறிய அதிகாரி... சாரி சொன்ன சுஷ்மா சுவராஜ்!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் குடியுரிமைத்துறை அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் மோனிகா காங்கேம்பம். இவர் கடந்த சனிக்கிழமையன்று வெளிநாடு செல்வதற்காக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த குடியுரிமைத்துறை அதிகாரி ஒருவர், ‘உன்னை பார்த்தால் இந்தியப் பெண்ணைப்போல் தெரியவில்லையே?' என விமர்சித்துள்ளார்.

மேலும், ‘நீ பக்கா' இந்தியப் பெண் தானா? என்றும், ஆம் எனில் நமது நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன? அதேபோல், மணிப்பூர் மாநிலத்தின் எல்லையோரம் உள்ள மற்ற மாநிலங்களின் பெயர்களை எல்லாம் சரியாக சொல் பார்ப்போம்' என அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த மோனிகா, தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது பலரால் பகிரப்பட்டது. அப்படியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பார்வைக்கும் இந்தப் பதிவு சென்றது.
அதனைப் படித்த சுஷ்மா, மோனிகாவுக்கு நேர்ந்த அவமரியாதைக்காக தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் குடியுரிமைத்துறை அதிகாரி செய்த தவறுக்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அதோடு, ‘அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனது துறையிடம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசுவதாகவும்' உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications