சமரவீர – சுஸ்மா சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு மீள் குடியேற்றம் - தமிழக மீனவர்கள் விடுதலை
டெல்லி: இந்தியாவில் அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களை, அவர்களின் சொந்த நாட்டிலேயே மீண்டும் குடி அமர்த்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேன பொறுப்பேற்ற பின்னர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த அவர் இந்தியா-இலங்கை இடையேயான நட்புறவை பலப்படுத்துவது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதித்தனர்.

அப்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகைக்கான தேதி குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அந்நாட்டு அமைச்சர் சமரவீர, இந்தியாவின் பங்களிப்புடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணம் பற்றிய அறிவிப்பும், இரு நாட்டு அதிகாரிகள் இடையிலான கூட்டுக் கூட்டம் பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சமரவீர திங்கட்கிழமை சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையே நல்லெண்ண நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் இலங்கை சிறைகளில் உள்ள 15 காரைக்கால் மீனவர்களையும், கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 87 படகுகளையும் விடுவிக்க நடிவடிக்கை எடுத்து வருவதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 15 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட 87 படகுகளை விடுவிப்பதற்கான தீர்ப்பு இலங்கை நீதிமன்றங்களில் திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications