3 நாள் அரசுமுறை பயணம்... இன்று வங்கதேசம் செல்கிறார் சுஷ்மா சுவராஜ்
டெல்லி: மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ்.
கடந்த மே மாதம் 26-ம் தேதி மத்திய அமைச்சராக பதவியேற்றார் சுஷ்மா சுவராஜ். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலி, தங்கள் நாட்டிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சுஷ்மா சுவராஜ் இன்று வங்கதேசம் செல்கிறார்.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் சுஷ்மா பேச்சு வார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.
சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின் தனியாக வெளிநாடு செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் சுற்றுப்பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.