அமெரிக்காவில் நடந்தாலே துடிக்கும் சுஷ்மா, அருகே நடந்த கொலையை மறந்தது ஏன்? #SaveFishermen
எதற்கெல்லாமோ கருத்து கூறி வந்த சுஷ்மா சுவராஜ் இந்திய கடல் எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காமல் உள்ளார்.
டெல்லி: தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டுவதை ஊர்ஜிதப்படுத்துவதை போல உள்ளது சுஷ்மா சுவராஜ் நடவடிக்கைகள்.
எதற்கெல்லாமோ கருத்து கூறி வந்த சுஷ்மா சுவராஜ் இந்திய கடல் எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காமல் உள்ளார்.
|
அமெரிக்க வம்சாவளி
"அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஹர்னிஷ் பட்டேல், அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டது எனக்கு மிகுந்த வலியை தந்துள்ளது" இது மார்ச் 5ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
வாஷிங்டன் அருகே
வாஷிங்டன் மாகாணம், கென்ட் நகரைச் சேர்ந்தவர் தீப் ராய் (39). இவர் தனது வீட்டில் காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த வெள்ளையின இளைஞர் ஒருவர், தீப் ராயுடன் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது.
அப்போது அந்த இளைஞர் துப்பாக்கியால் தீப் ராயை சுட்டார். "அமெரிக்காவில் இருக்கக்கூடாது, உங்கள் நாட்டுக்கு திரும்பி ஓடி விடு" என்று கத்தினார். படுகாயமடைந்த தீப் ராய் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார்.
|
தந்தையிடம் பேச்சு
அப்போது, சுஷ்மா வெளியிட்ட டிவிட் ஒன்றில், "இந்திய வம்சாவளியை சேர்ந்த தீப் ராய் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. தீப் ராய் தந்தையான சர்தார் ஹர்பால் சிங்கிடம் இதுகுறித்து பேசியுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
உள்நாட்டுக்காரருக்கு நியாயமில்லை
இப்படி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டபோது கூட பொங்கி எழுந்து, உறவுக்காரர்களுக்கு போன் செய்யும் அளவுக்கு துடித்த சுஷ்மா சுவராஜ், கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட்டதில் இறந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்ஜோ மரணம் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. காயமடைந்த சரோன் தந்தைக்கு போனும் செய்யவில்லை.
ஆறுதல் கருத்தும் இல்லை
வெளிநாட்டில் நடைபெறும் சம்பவங்களுக்கே துணை நிற்கும் சுஷ்மா, உள்நாட்டு எல்லைக்குள் நடந்த தாக்குதல் குறித்து கண்டனம் வேண்டாம்.. ஆறுதலாக ஒரு கருத்து கூடவா தெரிவிக்க மனமின்றி போய்விட்டது? கொல்லப்பட்டது தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஏற்பட்ட 'வெறுப்பா' அல்லது சுட்டது இலங்கை என்பதால் ஏற்பட்ட 'உவர்ப்பா' என்பதை இப்போது எஞ்சி நிற்கும் கேள்வி.
— வந்தேறி மாடு (@vantherimaadu) March 7, 2017 |
பாகிஸ்தான் என்றால்தான் பதறுமா
எல்லாவற்றுக்கும் தனி ஆவர்த்தனம் பாடும் தமிழக பாஜக வேண்டுமானால் சம்பவத்தை கண்டித்திருக்கலாம். ஆனால், சகல சக்திகள் கொண்ட பேரரசின் வெளியுறவுத்துறை கூறும் ஒற்றை வார்த்தையின் மதிப்புக்கு அது ஈடு ஆகாது. பாகிஸ்தானை தவிர்த்த எந்த நாடு இந்தியனை சீண்டினாலும் கண்டுகொள்ள மாட்டோம் என்ற கொள்கைக்கு பெயர் வெளியுறவுக் கொள்கை ஆகாது என்பதை சுஷ்மாவுக்கு யாராவது சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம்.
கேரள மீனவர்கள்
கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றபோது, இத்தாலி கடற்படையினர் எப்படி நடத்தப்பட்டனர் என்பதை உலகம் மறந்திருக்காது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அதை எப்படி கையாளுகிறது என்ற ஒப்புமை, சுஷ்மாவிடமிருந்து டிவிட் வராததன் பின்னணி காரணத்தை புட்டு, புட்டு வைக்கும்.