வி.வி.எஸ். லட்சுமணின் வங்கிப் பணம் ரூ. 10 லட்சம் திருட்டு.. கொல்கத்தாவில் ஒருவர் கைது!
கொல்கத்தா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை முறைகேடாக திருடியதாக கொல்கத்தாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக 32 வயதான இஸாசுல் ஷேக் என்ற நபரை மால்டாவில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர், வி.வி.எஸ். லட்சுமண கணக்கில் உள்ள ரூ. 10 லட்சம் பணத்தை மோசடியாக எடுத்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

இவரை தங்களது காவலில் எடுக்க ஹைதராபாத் போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.
சால்ட்லேக் வங்கிக் கிளையில் ஷேக்குக் கணக்கு உள்ளது. இந்த கணக்கில் நீண்ட காலமாகவே பரிவர்த்தனை நடக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமையன்று திடீரென ரூ.10 லட்சம் அவரது கணக்கில் முதலீடு செய்யப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் பிதாத் நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸாரின் உதவி நாடப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர காவல் துறையிடமிருந்து பிதாத்நகர் போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், வி.வி.எஸ் லட்சுமண் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை சிலர் எடுத்து சால்டேல்கே வங்கிக் கிளையில் டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஷேக் மீதான சந்தேகம் உறுதியானது. இதையடுத்து ஷேக்கை வங்கி நிர்வாகம் அழைத்தது. அவர் வங்கிக்கு வந்தபோது அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
லட்சுமண் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை ஷேக் தனது கணக்குக்கு மாற்றியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், ஷேக் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
அவருக்கு மேலும் என்னென்ன மோசடிகளில் தொடர்பு உள்ளது என்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications