நடத்தையில் சந்தேகம்: நெற்றியில் ஆணி அடித்த கணவர்- கோமாவில் மனைவி
டெல்லி: டெல்லியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவரது நெற்றியில் 5 இன்ச் ஆணியை அடித்துவிட்டார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு. அவரது மனைவி மம்தா(27). அவர்களுக்கு 3 குழந்தைகள். இந்நிலையில் பப்புவுக்கு மம்தாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாக பப்பு நினைத்தார். இதனால் கடந்த வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த பப்பு மம்மதாவின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு நெற்றியில் 5 இன்ச் ஆணியை அடித்தார். ஆணியின் பாதிப் பகுதி மம்தாவின் நெற்றிக்குள் இறங்கியவுடன் அவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் வந்து மம்மதாவின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயின் அருகில் அமர்ந்து இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தனர்.
காலையில் வீட்டு உரிமையாளர் குழந்தைகள் 3 பேரும் அழும் சத்தம் கேட்டு வந்து மம்மதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கோமாவில் இருக்கும் மம்மதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பப்புவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications