3 வயசு தான் ஆச்சு.. தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை மீது ஏறிய கார்.. பார்கிங்கில் நடந்த கொடூரம்
ஹைதராபாத்: பார்கிங்கில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் சாலைகளில் பயணிப்பது நாளுக்கு நாள் ஆபத்தான ஒன்றாகவே மாறி வருகிறது. சிலர் சாலை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் மோசமான விபத்துகளும் அரங்கேறுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேரை நாம் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளோம். சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரிப்பது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.

ஹைதராபாத்:
இதனிடையே தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மிக மோசமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் பார்க்கிங் பகுதியில் படுத்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது அங்கே நுழைந்த கார் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் ஆய்வாளர் எச்.வெங்கடேஷ்வர்லு கூறுகையில், "சிறுமியின் பெற்றோர் கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள். அவர்கள் பாலாஜி ஆர்கேட் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே கட்டிடம் கட்டும் பணியில் இருந்தனர்.
வெளியே வெயில் அதிகமாக இருந்ததால், தாய் கவிதா தனது மகளை அருகே இருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் உள்ள நிழலில் படுக்க வைத்துள்ளார். அப்போது தான் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது:
தொடர்ந்து குழந்தையின் தாய் கவிதா கூறுகையில், "அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் குடும்பத்தினரிடம் மகளைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டே வந்தேன்.. நானே அங்கு இரண்டு முறை சென்று பார்த்தேன். இருப்பினும், அங்கே யாருமே எனது குழந்தையைக் கவனிக்கவில்லை போல.. நொடிகளில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டது" என்றார்.
ஹரி ராமகிருஷ்ணா என்பவர் தான் காரை ஓட்டி வந்துள்ளார். சிறுமி அங்கே தூங்குவதைக் கவனிக்காமல், அவர் காரை பார்கிங்கை நோக்கி ஓட்டியுள்ளார். அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
குழந்தை மீது காரை மோதியதை உணர்ந்தவுடன் பதறிப்போன ராமகிருஷ்ணா உடனடியாக அவரது காரிலேயே அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், அங்கே குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து வாகன நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

யார் அவர்:
ராமகிருஷ்ணா இன்டீரியர் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். போலீசார் மேலும் கூறுகையில், "ராமகிருஷ்ணா மீது பிரிவு 304-A (அலட்சியத்தால் மரணம்) கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை பெட்ஷீட்டை கொண்டு மூடப்பட்டிருந்ததால் கவனிக்கவில்லை என ராமகிருஷ்ணா கூறினார்" என்றனர்.
மேலும், காரை ஓட்டும் போது அவர் மொபைலை பயன்படுத்திக் கொண்டே ஓட்டினாரா என்று போலீசார் சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications