குஜாராத்தின் கசாப்புக் கடைக்காரர்: மோடி மீது திரிணாமுல் காங்கிரஸ் தாக்கு
கொல்கத்தா: சொந்த மனைவியையே கவனித்துக்கொள்ள முடியாத குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை திரிணாமுல் கட்சி தாக்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பேசும்போது, ''மேற்குவங்க மாநில மக்களின் கனவுகளை நீங்கள் (மம்தா) உடைத்துவிட்டீர்கள். இந்த மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? பதவி நாற்காலி மீது உங்களுக்கு அவ்வளவு ஆசையா? இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இந்த மாநிலத்தின் மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், இடதுசாரிகளும், காங்கிரசும் சென்ற பாதையையே நீங்கள் கடைபிடித்தீர்கள். நீங்கள் வரைந்த ஓவியங்கள் 4 லட்சத்துக்கோ, 8 லட்சத்துகோ, 15 லட்சத்துகோ விலைபோய்க் கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில் உங்கள் ஓவியம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
இந்த விலை கொடுத்து உங்கள் ஓவியத்தை வாங்கியது யார்? நீங்கள் வரைந்த ஓவியங்களை யார், யாரெல்லாம் வாங்கினார்கள்? என்ன விலைக்கு வாங்கினார்கள்? என்பதை மேற்கு வங்காள மாநில மக்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். கலைப்பொருட்களை திருடர்கள் கையில் ஒப்படைப்பதை கலாரசிகர்களான இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்" என்று பேசியிருந்தார்.
மோடியின் இந்த தாக்குதலுக்கு திரிணாமுல் கட்சியின் செய்தி தொடர்பாளர் டெரெக் ஓ ப்ரியென், பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துக் கூறியுள்ளார். தனது ‘டுவிட்டர்' பக்கத்தில், எழுதியுள்ள அவர், ''குஜராத்தின் கசாப்புக்காரர் ஆகாய மார்க்கமாக மேற்கு வங்காளத்தில் குதித்து, இந்த மாநிலத்தின் வளர்ச்சி பற்றி மறுத்துப் பேச ஏதும் இல்லாத நிலையில், தனிநபர் தாக்குதல் நடத்தியிருக்கிறார். தனது சொந்த மனைவியையே கவனித்துக்கொள்ள முடியாத குஜராத்தின் கசாப்புக்காரர் இந்த நாட்டை எப்படி கவனித்துக் கொள்வார்?
மம்தா வரைந்த ஓவியங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக விற்கப்படவில்லை. ஓவியங்களை விற்ற பணம் நல்ல நோக்கத்துக்காகவும், தேர்தல் செலவுக்காகவும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கு ஓவியத்தை விற்று அந்த பணத்தை மம்தா எடுத்துக் கொண்டதாக கூறும் குஜராத்தின் கசாப்புகாரர், தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அல்லது, மானநஷ்ட வழக்கை சந்திக்க வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications