சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை அடக்க 10,000 துணை ராணுவத்தினர், 2 ஹெலிகாப்டர்களை அனுப்பும் மத்திய அரசு
டெல்லி: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை அடக்க 10 ஆயிரம் கூடுதல் துணை ராணுவ வீரர்கள், 2 கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 ஆயிரம் என்ஜினியர்களை தீவிரவாதத்திற்கு எதிரான குழுவில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் இணை அமைச்சர் கிரண் ரெஜ்ஜு, மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, துணை ராணுவ தலைவர்கள், மூத்த தலைவர்கள், திட்ட கமிஷன் தலைவர், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சக அதிகாரிகள், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாவோயிஸ்டுகளை அடக்குவது குறித்து ஆலோசித்தனர்.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்திற்கு அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 10 ஆயிரம் துணை ராணுவ அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள 2 ஆயிரம் என்ஜினியர்கள்/தொழில்நுட்ப வல்லுனர்கள் வருகிறார்கள். மேலும் 2 ஹெலிகாப்டர்களும் சத்தீஸ்கருக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் இறந்தவர்களை விட சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதாவது மாவோயிஸ்டுகளால் பலர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.