பாஜக, காங்கிரஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள்: கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகரில் உள்ள உத்தம் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வருவார்கள். உங்களுக்கு யாராவது லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள். அந்த இரண்டு கட்சியினரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு துடைப்பம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
49 நாட்களில் எங்களால் லஞ்சத்தை தடுத்து நிறுத்த முடிந்தது என்றால், 7 மாதங்களில் பாஜக அதை செய்திருக்க வேண்டும் இல்லையா என்றார்.
கெஜ்ரிவாலின் பேச்சு டெல்லி மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஷாசியா இல்மி தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளது. கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.