இந்திரா காந்தி நகை கொடுத்தாரா?காரணமே நேரு தான்.. கேரளாவில் போட்டுடைத்த அண்ணாமலை.. வயநாட்டில் சர்ப்ரைஸ்
வயநாடு: இந்தியா சீனா போரின் போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதாக கூறுகிறார்கள். 1962ல் இந்தியா சீனா போர் நடந்ததற்கு காரணமே நேரு தான். இந்திரா காந்தி மட்டும் இல்லை நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து மக்களும் நகைகள் கொடுத்தனர். இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் விட்டுவைக்காது என பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,""பிரதமர் மோடிக்கு தாலியின் பின்னால் உள்ள உணர்வுகள் தெரியவில்லை என கூறியிருந்தார்.

மேலும் போரின் போது எனது பாட்டி இந்திரா காந்தி ஆபரணங்களை நாட்டுக்காக கொடுத்தார். என் தாய் தாலியை நாட்டிற்காக தியாகம் செய்தார். ஆனால், பிரதமர் இதனை எதையும் அறியாமல் பேசுகிறார். பெண்களின் உணர்வுகள் மோடிக்கு தெரியாது" என பேசியிருந்தார்.
பிரியங்கா காந்தி: இந்நிலையில் பிரியங்கா காந்திக்கு பதிலளித்துள்ளார் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை. கேரளாவில் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," கேரளாவைப் பொறுத்தவரை வயநாடு ஒரு முக்கியமான தொகுதி.. காரணம் விஐபி தொகுதி. ராகுல் காந்தி போட்டியிட்டு ஜெயித்திருக்கிறார். கடந்த முறை கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் விஐபி எங்களுக்கு வேண்டாம் என்கின்றனர் வயநாடு தொகுதி மக்கள்.
அண்ணாமலை: இந்த 5 ஆண்டுகளில் ராகுல் காந்தி வயநாட்டுக்கு வந்தது ஏழு முறை. இரண்டு முறை திருமணத்திற்காகவும் 5 முறை மக்கள் பிரச்சினைக்காகவும் வந்திருக்கிறார். வயநாடு ராகுல் காந்தி பதவியேற்ற போது இருந்ததைவிட தற்போது மிக மோசமாக உள்ளது. கடந்த தேர்தலில் 19 தொகுதிகளில் காங்கிரஸும் ஒரு தொகுதியில் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. தேசிய அளவில் ராகுல் காந்தி பிரதமர் என்ற பிரச்சாரத்தால் கடந்த முறையில் அதிக வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்தது. கேரள மக்களுக்கு தெரியும் ராகுல் காந்தி பிரதமராக வரப்போவதில்லை
மோடி தான் பிரதமர்: இந்தியா கூட்டணியும் வெற்றி பெறப்போவதில்லை. மோடி தான் பிரதமராக வரப்போகிறார் என்பது அனைவருக்குமே தெரியும். ஜூன் நான்காம் தேதி வயநாடு தொகுதி மிகப் பெரிய ஆச்சரியத்தை அளிக்கும். கீழே இருக்கும் தொழிலாளிகள் இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் இந்து என பார்க்கவில்லை. பிரச்சனையை தீர்க்க வேண்டிய ஒரு மனிதன் வயநாட்டில் இருக்க வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி இடம் பேச வேண்டும் தங்களது பிரச்சினையைப் பேச வேண்டும் என நினைக்கின்றனர்.. எனவே பெரிய மாற்றம் வயநாட்டில் உள்ளது.
பொருளாதார கணக்கெடுப்பு: சொத்து பிரிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சு காங்கிரஸின் பல்வேறு தலைவர்கள் பேசியதை மேற்கோள் காட்டி பேசியது. 2006ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசிய பேச்சு, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பேச்சு ஆகியவற்றின் சாரம்சம் தான்.. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும்.. பொருளாதார கணக்கெடுப்புக்கு பிறகு இந்தியாவின் சொத்து யார் கையில் இருக்கிறது எந்த வர்க்கத்தின் கையில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க போகிறேன்? என ராகுல்காந்தி பேசினார்.
சொத்து பிரிப்பு: பின்னர் அந்த சொத்துக்கள் பிரித்து அளிக்கப்படும் என ராகுல் பேசி இருக்கிறார். சொத்துக்களை பிரித்து தருவேன் என பேசுவதற்கு காரணம் என்ன? அமெரிக்காவில் இருந்து பேசிய சாம் பிட்ரோடா அமெரிக்காவில் 45 சதவீத சொத்துக்களை மட்டுமே வாரிசுகளுக்கு கொடுக்க முடியும்.. 55 சதவீத சொத்துக்களை அரசே எடுத்துக் கொள்ளும்.. இந்தியாவிலும் இதனை கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை யாருக்கும் கொடுப்பதற்கோ.. ஒரு சர்வே மூலம் அதனை யாருக்கும் தருவதற்கும் விருப்பமில்லை..
இந்திரா காந்தி: இந்தியா சீனா போரின் போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதாக கூறுகிறார்கள். 1962 இல் இந்தியா சீனா போர் நடந்ததற்கு காரணமே நேரு தான். இந்திரா காந்தி மட்டும் இல்லை நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து மக்களும் நகைகள் கொடுத்தனர். இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்" என அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications