தமிழக விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் - டெல்லியில் பதற்றம்
டெல்லியில் அமைதியான முறையில் போராடி வந்த தமிழக விவசாயிகள் திடீரென மரத்தின் மீதேறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லி: டெல்லியில் 12 நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் கேட்டு மரத்தில் ஏறி இருவரும் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர் போராட்டம்
மரத்தில் ஏறி தூக்குப்போடுவது, பிச்சைஎடுப்பது, தெருவில் படுத்து புரள்வது, மொட்டையடிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். தெருவிலேயே உண்டு உறங்கி 12 நாட்களாக போராடி வருகின்றனர்.
பாடை கட்டி போராட்டம்
கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்தித்து இவர்கள் கோரிக்கை வைத்த போதிலும் இவர்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து இன்று பாடை கட்டி போராட்டம் நடத்தினர்.
நடிகர்கள் ஆதரவு
இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக நடிகர்களான விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் ஆகியோர் டெல்லியில் வந்து இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர்.
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில் சில விவசாயிகள் மரத்தின் மீதேறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நடிகர் விஷால் அவர்களை கீழே இறங்கி வர வலியுறுத்தினர். பலரின் கோரிக்கையை ஏற்று அனைவரும் கீழே இறங்கி வந்தனர். இதனையடுத்து விவசாயிகள் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். திடீரென விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.
நாங்கள் அகதிகளா
விவசாயிகளை அகதிகளைப் போல நடத்துவதாகவும் இதன் காரணமாகவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.