அய்யோ பறிபோகும் பாலாறு நதி! தமிழ்நாட்டுக்கு ஜெகன் பச்சை துரோகம்! புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல்!
குப்பம்: தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பாலாறு குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் பாலாறு பாசன விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
பாலாறு ஆறு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என 3 மாநிலங்களில் பயணிக்கிறது. கர்நாடகாவின் சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்திமலையில் உற்பத்தியாகிறது பாலாறு நதி. கர்நாடகாவில் 90 கிமீ, ஆந்திராவில் வெறும் 45 கிமீ மட்டுமே பயணிக்கும் இந்த பாலாறு நதி தமிழ்நாட்டில் மட்டும் 222 கிமீ பாய்ந்தோடுகிறது. தமிழ்நாட்டின் வயலூர் அருகே வங்க கடலில் சங்கமிக்கிறது பாலாறு நதி. பிரிக்கப்படாத வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ தொலைவுக்கு பாலாறு நதி பாய்ந்து விவசாயிகளை வளப்படுதியது.

ஆனால் மாநில ஒப்பந்தங்களை மீறி பாலாறு ஆற்றின் குறுக்கே ஆந்திரா மொத்தம் 22 தடுப்பணைகளை ஏற்கனவே கட்டி விட்டது. இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பாலாறு நதிநீர் கிடைப்பதே குதிரை கொம்பாகிவிட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பாலாறு தடுப்பணைகள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 13-ந் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தற்போது திடீரென பாலாறு அருகே மீண்டும் புதிய தடுப்பணை கட்ட ஆந்திரா களமிறங்கிவிட்டது. ஆந்திராவின் குப்பம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில்தான் இந்த புதிய தடுப்பணையை ஆந்திரா அரசு கட்ட உள்ளது. இந்த புதிய தடுப்பணைக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் பேரதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றத்தில் பாலாறு நதி தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தி உரிய தடை உத்தரவைப் பெறுவதுதான் வழி; இதனை தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்பது பாலாறு நதி விவசாயிகளின் குமுறலும் கோரிக்கையுமாகும்.












Click it and Unblock the Notifications