கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு
ஹைதராபாத்: தூத்துக்குடி எம்பியாக கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்திரராஜன் சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுகவின் வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டார். இந்த நிலையில் தமிழிசை தோல்வி அடைந்தார்.
தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் அவரது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்திரராஜனும், அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தானகுமாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்காளர்
அந்த மனுவில் ஒரு வேட்பாளரின் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு ரூ 2 ஆயிரம் வழங்கியதும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 18-ஆம் தேதி வாக்காளர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

23-ஆம் தேதி விசாரணை
அப்போது தமிழிசை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர் தரப்பில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தனியாக தொடர்ந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இரு வழக்குகளிலும் கனிமொழி உள்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை 23-ஆம் தேதி ஒத்திவைத்தார்.

தமிழிசை அறிவிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனிடையே கனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன்.

அக்டோபரில் முடிவு
வழக்கை வாபஸ் பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். வழக்கை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து அக்.14-இல் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications