மோடியின் கவனத்தை ஈர்க்க ருத்ராட்சை அணிந்து விவசாயிகள் போராட்டம்.. திமுக எம்பி கனிமொழி நேரில் ஆதரவு
பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க ருத்ராட்சை மாலை அணிந்து டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக விவசாயிகள் ருத்ராட்சை மாலை அணிந்து இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடும் வெயில் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் வயது முதிர்ந்த நிலையிலும் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
விவசாயிகளை சந்திக்க மறுப்பு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி இதுவரை அவர்களை சந்திக்கவில்லை. சந்திக்கவும் மறுத்து வருகிறார்.
விதவிதமாக போராட்டம்..
தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளை எட்டியுள்ளது. நாள்தோறும் அரை நிர்வாணத்தோடு எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, பிச்சையெடுப்பது என விதவிதமாக தங்களின் போராட்டத்தை கொண்டுசெல்கின்றனர்.
ருத்ராட்சை அணிந்து சாமியாரைப் போல்..
அந்த வகையில் இன்று கழுத்தில் ருத்ராட்சை மாலை அணிந்து சாமியாரைப் போல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு ருத்ராட்சை மாலை அணிந்து போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் ஆதரவு
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது விவசாயிகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்த அவர்கள், விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.