உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய கர்நாடகா மீது ஆர்டிகிள் 142-ன் கீழ் நடவடிக்கை.. தமிழக அரசு வாதம் இதுதான்!
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

சேகர் நாப்தே, தனது வாதத்தில், காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா மீறியுள்ளது. ஆர்டிகிள் 142-ன் கீழ் கர்நாடகா மீது சுப்ரீம்கோர்ட் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை ஆரம்பம் முதலே கர்நாடகா மதிக்கவில்லை. தொடக்கம் முதலே காவிரியிலிருந்து குறைந்த அளவு தண்ணீரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுவந்தது. பெங்களூர் காவிரி பாசன பகுதி கிடையாது. எனவே, பெங்களூருக்கு குடிநீர் வழங்க சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சரியல்ல என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கர்நாடக தரப்பு வாதத்தை கேட்காமலே எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, அவர்கள் வாதிடட்டும் என கூறி கர்நாடக தரப்பு வழக்கறிஞர் நாரிமனை வாதிட நீதிமன்றம் அனுமதித்தது.
நாரிமனோ, கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் நோக்கம் இல்லை என்றும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கர்நாடக அரசு சட்டசபையில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மழை பெய்தால் நவம்பர் இறுதிக்குள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என்றார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.
கர்நாடக எம்.பிக்களான சந்திரப்பா, முத்த ஹனுமே கவுடா, சுரேஷ் கவுடா, பிரகாஷ் ஹுக்கேரி, ராஜிவ் கவுடா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் அமர்ந்து வழக்கை நேரில் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை வேண்டுமென்றே மீறுவோருக்கு எதிராக ஆர்டிகிள் 142-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications