கொடநாடு சம்பவம்.. சயான், மனோஜ் கேரளாவில் கைது... தமிழகம் அழைத்து வர நடவடிக்கை
திருச்சூர்:கொடநாடு மர்ம மரண வழக்கில், சயான், மனோஜ் ஆகியோரை கேரளாவில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். ஆவணப்படத்தில் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதை ரத்து செய்ய கோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மனோஜ், சயான் ஆகியோர் கொலை வழக்கில் ஜாமீன் பெற்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டும் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம்... பிப்ரவரி 8ம் தேதி சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனையும் ரத்து செய்தது. ஆனால்... அதன் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடையவில்லை.
இந்நிலையில்... தமிழக போலீசார் கேரளா சென்றனர். திருச்சூரில் இருந்த சயான் மற்றும் மனோஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விரைவில் இருவரையும் போலீசார் தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications