வாலண்டியராக போய் சிக்கிக்கொண்ட கர்நாடகா.. இதோ, தமிழகத்துக்கு வருகிறது கூடுதல் தண்ணீர்!
டெல்லி: தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6ம் தேதி நள்ளிரவு (அதாவது 7ம் தேதி அதிகாலை முதல்) கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

விசாரணை
இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ.லலித் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

செல்லாது என்ற சுப்ரீம்கோர்ட்
மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது. இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது.

உத்தரவில் திருத்தம்
இதன்பிறகு, வரும் 20ம் தேதிவரை தினமும் தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று கூறி தங்கள் முந்தைய உத்தரவை மாற்றி பிறப்பித்தனர் நீதிபதிகள். 20ம் தேதி மதியம் 2 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

கர்நாடகாவுக்கு நஷ்டம்
முந்தைய உத்தரவுப்படி 16ம் தேதி நள்ளிரவோடு தண்ணீரை கர்நாடகா நிறுத்தியிருக்க முடியும். ஆனால் திருத்தப்பட்ட உத்தரவுப்படி சுமார் 4 நாட்கள் கூடுதலாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகா சிக்கியுள்ளது. அதேநேரம், 15 ஆயிரம் கன அடிக்கு பதிலாக 12 ஆயிரம் கன அடி தண்ணீராக திறக்கப்படும் நீரின் அளவை குறைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

96 ஆயிரம் கன அடி
இன்றைய அளவான, 15 கன அடியை ஏற்கனவே காவிரியிலிருந்து, கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. எனவே, நாளை 13ம் தேதி முதல் 20ம் தேதிவரை 8 நாட்களுக்கு தினமும் தலா 12 ஆயிரம் கன அடியை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதாவது இந்த 8 நாட்களில், 96 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும்.

மனுவை போட்டு மாட்டிக்கொண்டது
ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ள 90 ஆயிரம் கன அடி மற்றும் இனிமேல் 8 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டிய 96 ஆயிரம் கன அடி தண்ணீரின் அளவை கூட்டினால் தமிழகத்திற்கு 1 லட்சத்து 86 ஆயிரம் கன அடி தண்ணீர் கிடைக்கும். ஒருவேளை கர்நாடகா சீராய்வு மனுவை தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், 10 நாட்களுக்கு தலா 15 ஆயிரம் கன அடி நீர் என்ற அடிப்படையில் 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரோடு கர்நாடகா நிறுத்தியிருக்க முடியும்.

அதிருப்தியில் நீதிமன்றம்
உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் கர்நாடகா மிகுந்த சுணக்கம் காட்டியது, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் நடத்தியது போன்றவற்றால் உச்சநீதிமன்றம் அதிருப்தியடைந்திருந்தது. இன்று விசாரணையின்போதும், தங்கள் அதிருப்தியை நீதிபதிகள் தெரிவிக்க தவறவில்லை. எனவே நீரின் அளவை குறைத்துவிட்டு, திறக்கும் நாட்களை அதிகரித்துள்ளனர் நீதிபதிகள். கர்நாடக கோரிக்கை ஏற்கப்பட்டதை போல தெரிந்தாலும், உண்மையில் லாபம் தமிழகத்துக்கே.












Click it and Unblock the Notifications