Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவத்தினரை திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள்... ராஜ்நாத் சிங்கிடம் தருண் விஜய் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மத்திய துணை ராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்கள் ‘திருக்குறள்' படிக்க வலியுறுத்துங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், உத்தரகாண்ட் பாஜக ராஜ்யசபா எம்.பி. தருண் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கும் தமிழ் மொழியின் பெருமையை அறியச் செய்யும் பணியை இயக்கம் போல மேற்கொண்டு வருகிறார் தருண் விஜய். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் மாநிலங்களவையில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் திருக்குறளை பயிற்றுவிக்கவும், திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாடவும் வழி வகை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Tarun Vijay met Rajnath singh

தருண் விஜயின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அது தொடர்பான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் தருண் விஜய். அப்போது அவருக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக அளித்த தருண் விஜய், திருக்குறளின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்.

மேலும், "மத்திய துணை ராணுவப் படையினருக்கு திருக்குறளை அளித்து அதன் அர்த்தத்தை விளக்க வேண்டும். திருக்குறளைப் படித்தால் உள்ளத் தெளிவும், மன உறுதியும் அதிகரிக்கும். அண்மையில் சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் ஏராளமான வீரர்களை நாம் இழந்துள்ளோம். மத்திய துணை ராணுவப் படையினருக்கு மன உறுதி குறைவாக இருந்ததும் இதற்குக் காரணமாகும். போர் முறைகள், போர் தந்திரங்கள் தொடர்பாக தனது குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். அதன் அர்த்தத்தை வீரர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள்' என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, "திருவள்ளுவர் மீதும் அவரது குறள் மீதும் மிகப் பெரிய மரியாதை எனக்குள்ளது. இந்தியாவின் அறிவாற்றலுக்கு அவர் அடையாளமாகத் திகழ்கிறார். நாட்டின் பழமைவாய்ந்த திருக்குறள் பொதுமறை தற்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும். உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன்' என ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

மேலும், இந்தச் சந்திப்பின் போது, ‘திருவள்ளுவரின் பிறந்த நாளை இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு கொண்டாட வேண்டும்' என்றும் தருண் விஜய் கேட்டுக் கொண்டார். இக்கோரிக்கை குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறுகையில், ‘தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் ஆற்ற வேண்டிய தொண்டாக இப்பணியைக் கருதுகிறேன். நாடாளுமன்றத்துக்கு வெளியே இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன். இந்த முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவும் இருப்பதால், விரைவில் நாட்டின் அனைத்து திசைகளிலும் தமிழ் எதிரொலிக்கும். தமிழனுக்கு சிறந்த மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+