ஹைதராபாத்தில் 22 வயது டிசிஎஸ் பெண் என்ஜினியர் மாயம்: பெற்றோர் கவலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வேலை பார்க்கும் பெங்களூரைச் சேர்ந்த டிசிஎஸ் ஊழியை மாயமாகியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ(22). ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கச்சிபவுலியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அனு நேற்று பெங்களூரில் உள்ள தனது தந்தை பிரபாகருக்கு போன் செய்து தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட பிரபாகர் தான் உடனே கிளம்பி ஹைதராபாத் வந்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.
பிரபாகருடன் பேசிய பிறகு அனுவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. பிரபாகர் தனது மகளை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள விடுதிக்கு இன்று சென்றுள்ளார். அங்கு இருந்தவர்களோ அனு அலுவலகத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கும் அனு இல்லை. இதையடுத்து அவர் தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனுவை தேடி வருகிறார்கள்.