ரூ.500 கோடியில் சொகுசு பங்களா! "ஜெகன் vs சந்திரபாபு நாயுடு!" அலறும் ஆந்திரா பிரதேசம்- என்ன நடக்கிறது
அமராவதி: விசாகப்பட்டினம் ருஷிகொண்டாவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு கட்டி வந்த ஆடம்பரமான பங்களாவின் போட்டோக்களை பகிர்ந்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சித்து இருந்தது.. ஆந்திரா அரசு பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த பங்களா தேவைதானா எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கிடையே ஜெகன் தரப்பில் இருந்து இப்போது பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று ஆட்சியைப் பிடித்தது. இதற்கு முன்பு கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

ருஷிகொண்டா மலை: அப்போது அவரது அரசு விசாகப்பட்டினத்தில் உள்ள அழகிய கடற்கரை பகுதியில் ருஷிகொண்டா மலைகளின் அருகே பிரம்மாண்டமான பங்களாவைக் கட்டி வந்துள்ளது. நிச்சயம் இந்தத் தேர்தலில் ஜெகன் மோகன் ஆட்சியைத் தக்க வைப்பார் என்ற நம்பிக்கையில் இந்த வளாகத்தைக் கட்டி வந்துள்ளனர். இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் அங்கேயே தங்குவார்.. அவரது முகாம் அலுவலகம் அங்கேயே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாகப் பெரியளவில் தகவல்கள் வெளியே வராமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இப்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், இந்த பங்கா குறித்த தகவல்களைத் தெலுங்கு தேசம் வெளியிட்டுள்ளது. அந்த பங்களாவின் படங்களைப் பகிர்ந்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி தங்க ரூ.500 கோடி மதிப்பில் மலை உச்சியில் அரண்மனையைக் கட்டி வந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
குற்றச்சாட்டு: இது தொடர்பாகத் தெலுங்கு தேசம் செய்தி தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மாரெட்டி பட்டாபி கூறுகையில், "ருஷிகொண்டாவில் உள்ள இந்த பங்களாவில் இருக்கும் ஆடம்பரம் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. குளியல் தொட்டிக்கு மட்டும் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள குளியல் தொட்டி இருக்கிறது.. மர சாமான்கள், மசாஜ் டேபிள் என்று எல்லாமே விலை உயர்ந்தவையாகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பதில்: ஆந்திரப் பிரதேச அரசுக்கு ஏற்கனவே ரூ. 12 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் மோசமான நிதி நிலைமை கருத்தில் கொள்ளாமல் இந்த பங்களாவைக் கட்டியுள்ளனர் என்றும் இந்த கட்டுமான ஒப்பந்தமும் கூட ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இந்த ஆடம்பர பங்களா விவகாரம் ஆந்திராவில் மிகப் பெரிய பேசுபொருள் ஆனது.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜெகன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கனுமுரி ரவி சந்திர ரெட்டி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த பங்களா ஜெகன்மோகன் ரெட்டியின் தனிப்பட்ட சொத்து இல்லை.. அது அவருக்குச் சொந்தமான இடத்திலும் கட்டப்பட்ட பங்களா இல்லை. இது அரசின் சொத்து தான்.. கட்டுமானம் நல்ல தரத்தில் தான் இருக்கிறது. அதில் முறைகேடுகள் எதுவும் இல்லை.
ருஷிகொண்டா அரண்மனை: விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்படும் போது அங்கிருந்து ஆட்சி செய்யவே ருஷிகொண்டா அரண்மனையை.. இது அரசு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.. இந்த பங்களா ஆந்திரப் பிரதேச அரசுக்குச் சொந்தமானது... ஜெகன் மோகன் ரெட்டி அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானது இல்லை. ஆந்திர கட்டுமான கலையைக் காட்டும் வகையில் அவை கட்டப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் இங்கு வரும் போது அவர்கள் தங்கக் கூட இந்த பங்களாவை பயன்படுத்தலாம்" என்றார்












Click it and Unblock the Notifications