16 வயது மாணவனுடன் மாயமான 23 வயது மும்பை ஆசிரியை பெங்களூரில் கைது: மாணவன் மீட்பு
மும்பை: பள்ளி மாணவனை கடத்தி பெங்களூர் அழைத்துச் சென்ற குற்றத்திற்காக மும்பை ஆசிரியை ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த பைரவ் உதய் என்பவரின் 16 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தான். கடந்த ஜனவரி 25-ந்தேதியன்று புதிய ஆடை வாங்க கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவர் வீடு திரும்பவில்லையாம். இதனால், மகனைக் காணவில்லை என வக்கோலா போலீசில் புகார் அளித்தார் பைரவ்.
புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பைரவின் மகன் படிக்கும் பள்ளியின் பெண்ஆசிரியை அஞ்சலி சிங் (23) அவனை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அவர் சிறுவனுடன் பெங்களூரில் பதுங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பெங்களூர் விரைந்த மும்பை போலீசார் அஞ்சலி சிங்கை கைது செய்து காணமால் போன பைரவ்வின் மகனையும் மீட்டனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை செய்து கொண்டு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அஞ்சலியை வருகிற 10ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.