என்னைப் பத்தி தப்புக் கணக்குப் போடாதீங்க.. விமர்சகர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கோரிக்கை
பாட்னா: என்னைப் பற்றி அவசரப்பட்டு தப்புக் கணக்குப் போட வேண்டாம். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து எடை போடக் கூடாது என்று பீகார் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
முதல்வர் நிதீஷ் குமார் பெருமைப்படும் அளவில் தான் செயல்படப் போவதாகவும், தனது செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இளைஞர் சக்தி
இளைஞர் சக்தி மீது பீகார் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் விளங்குவேன். அதன் லாபம் முழுவதும் பீகார் மக்களுக்கே கிடைக்கும்.

அட்டையை வைத்து புத்தகத்தை எடை போடாதீர்
ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து எடை போடக் கூடாது. அதேபோலத்தான் மருந்து கசப்பாக இருந்தாலும் விளைவு இனிப்பாக இருக்கும். என்னையும் அதுபோலவே பாருங்கள்.

என் குடும்பத்தில் 2 பேர் இருக்காங்க
என் குடும்பத்திலேயே 2 முதல்வர்கள் உள்ளனர். அரசு செயல்படும் விதம் எனக்குத் தெரியும். அனுபவம் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் எதுவுமே தெரியாதவன் அல்ல.

நிதீஷ்ஜியிடம் கற்றுக் கொள்வேன்
ஒவ்வொன்றையும் நான் கற்றுக் கொள்வேன். நிதீஷ் ஜியிடமிருந்து கற்றுக் கொள்வேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர். என்னைப் பற்றி தவறாக கணிக்க வேண்டாம் என்றார் அவர்.

முதல் முறையாக
லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி ரகோப்பூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக அவர் சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளார். அதோடு எடுத்த எடுப்பிலேயே துணை முதல்வராகவும் ஆகியுள்ளார்.

சமூக வலைதளத்தில் கிண்டல்
இவ்வளவு இளம் வயதில் (26) தேஜஸ்வியை துணை முதல்வராக்கியிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடித்தும், விமர்சித்தும் வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதமாகவே தேஜஸ்வி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications