சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு கலைக்கப்பட்டது.. ஆளுநர் ஒப்புதல்!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு இன்று பதவி விலகி உள்ளார்.
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு இன்று பதவி விலகி உள்ளார். இதனால் அங்கு ஆட்சி கலைந்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 2014ல் தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில் தற்போது அவரது ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் மீதம் உள்ளது.
அவருக்கு மக்கள் ஆதரவும் நன்றாகவே உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சந்திரசேகர ராவ் முடிவெடுத்து உள்ளார்.
ஏன் முடிவு
முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவெடுத்தது உள்ளார். இதன் மூலம் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இப்போதே ஆட்சியை கலைத்துள்ளார்.
ஏற்கனவே சொன்னார்
சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் பெரிய கூட்டமும் நடத்தினார். தேர்தல் பிரச்சார கூட்டம் போலவே இது இருந்தது. அதில் சந்திரசேகர ராவ் ''ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பேன்'' என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தினார். காலை பத்து மணிக்கு இந்த கூட்டம் நடந்தது. இந்த அமைச்சரவையை கலைக்க முடிவு எடுக்கப்பட்டது.அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் அம்மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்தார் சந்திரசேகர ராவ். அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க கடிதம் அளித்தார்.
கலைக்கப்பட்டது
முதல்வர் சந்திரசேகர ராவ் தனது எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுனரை சந்தித்தார். அவர் அழுத்த பரிந்துரை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார். இதனால் இன்றே தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது.