Corona: ட்ரம்ப் குணமடைய பட்டினி இருந்து பிரார்த்தனை செய்த தெலங்கானா விவசாயி உயிரிழப்பு!!
மேதக்: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குணமடைய பட்டினியுடன் தூங்காமல் பிரார்த்தனை செய்து வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி பஸ்ஸா கிருஷ்ண ராஜூ மாரடைப்பினால் உயிரிழந்தார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பஸ்ஸா கிருஷ்ண ராஜூ. ட்ரம்ப்புக்கு கொரோனா என்று தெரிய வந்ததில் இருந்து இவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். ட்ரம்ப் குணமடைய வேண்டி தொடர்ந்து பட்டினி இருந்து கடவுளை பிரார்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் மேதக்கில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாரடைப்பில் உயிரிழந்தார்.
கடந்தாண்டு ஆறடி உயர ட்ரம்ப் சிலை அமைத்து, தினமும் பூஜித்து வந்தார். இதையடுத்து இவரது பெயர் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் வெளியாகி இருந்தது. இவர் தீவிர ட்ரம்ப் ஆதரவாளர், தொண்டர், ரசிகர் என்று இவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது நண்பர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருந்த பேட்டியில், ''ட்ரம்ப்புக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தவுடன் மிகவும் வேதனை அடைந்தார். இதனால் தூக்கம் இல்லாமல் வருத்தப்பட்டு வந்தார். ட்ரம்ப் குணமடைய வேண்டும் என்று கடந்த நான்கைந்து நாட்களாக பட்டினியுடன் பிரார்த்தனை மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் மாரடைப்பில் உயிரிழந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.