திருட்டு சிடியால் 380 கோடி நஷ்டம்.. களையெடுக்கும் முயற்சியில் நேரடியாக இறங்கிய தெலுங்கானா அரசு!
ஹைதராபாத்: திருட்டு சிடியை ஒழிக்கும் முயற்சியில் தெலுங்கானா அரசு நேரடியாக களமிறங்கி இருக்கிறது.
சமீபகாலமாக இந்தியத் திரைப்படங்கள் தணிக்கைக் குழுவினரிடம் படாதபாடுபட்டு வருகிறது. தணிக்கையை முடித்து வெளியாகும் படங்களுக்கு திருட்டு விசிடி மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன.
காவல் நிலையம்
தமிழ்த் திரையுலகம் திருட்டு சிடியால் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் என்ற எந்த பாகுபாடுமின்றி படம் வெளியான இரண்டு நாட்களிலேயே ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகின்றனர். இதற்காக தமிழ் நடிகர்கள் தனித்தனியாகப் போராடி வருகிறார்களே தவிர, ஒட்டுமொத்தமாகப் போராடி இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட யாரும் முன்வரவில்லை.
உத்தா பஞ்சாப்
சமீபத்தில் உத்தா பஞ்சாப் திரைப்படம் திரையரங்குகளுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி விட்டது. இதனை அறிந்த படக்குழு உடனடியாக அந்தப் படத்தை இணையத்திலிருந்து நீக்கி விட்டது. ஆனால் தமிழ்த் திரையுலகினர் தங்களது படங்கள் ஆன்லைனில் வெளியாகும்போது கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுப்பதுடன், தங்களது வேலை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கின்றனர்.
தெலுங்கானா
இந்நிலையில் தெலுங்கானா அரசு திருட்டு சிடியைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியு அதற்காக ஒரு தடுப்புக் குழுவை அமைத்துள்ளனர். இதற்காக அறிவுசார் சொத்து குற்றப்பிரிவு என்ற முறையை உருவாக்கி மாநில சைபர் கிரைம் பிரிவுடன் இணைந்து திருட்டு சிடி, இணையதளங்கள் மூலம் புதுப்படங்கள் வெளியாவதைத் தடுக்க உள்ளனர்.
380 கோடி
கடந்த வருடம் திருட்டு சிடியால் சுமார் 380 கோடி ரூபாய் அளவுக்கு தெலுங்குத் திரையுலகம் நஷ்டத்தை சந்தித்ததுதான் இதற்கான முக்கியக் காரணமென்று கூறுகின்றனர். இதுகுறித்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கும் ஐடி அமைச்சர் கேடிஆர் '' இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த முயற்சியை தெலுங்கானா அரசு எடுத்துள்ளது. இதற்கு திரைத்துறையினரின் நீண்டநாள் கோரிக்கையே முக்கியக் காரணம்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த முறையில் திருட்டுத்தனமாக இணையத்தில் புதுப்படங்கள் வெளியானால் அதனை 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடலாம் என்று, இந்தத் துறையின் செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழியை தமிழ்த் திரையுலகினரும் பின்பற்றுவார்களா?