அன்னை சோனியா காந்தியம்மன் திருக்கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது....!
ஹைதராபாத்: யார் யாருக்கோ கோவில் கட்டும் காலம் இது. கடவுள்களுக்குக் கோவில் கட்டியது போய், இப்போது சச்சின் டெண்டுல்கருக்கும் கோவில் கட்டுகிறார்கள். நடிகைகளுக்கும் கோவில் கட்டுகிறார்கள். இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் ஒருவர் கோவில் கட்டக் களம் இறங்கியுள்ளார்.
ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில்தான் இந்த சோனியா காந்தி கோவில் உருவாகிறது. இந்தக் கோவிலில் சோனியா காந்தியின் முழு உருவச் சிலை வைக்கப்படவுள்ளதாம்.
தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்கர் ராவ்தான் இந்த கோவிலையும், சிலையையும் உருவாக்குகிறார். மேலும், சோனியா காந்திக்கு தெலுங்கானா தளி என்றும் பெயர் சூட்டியுள்ளார் ராவ்.. அதாவது தெலுங்கானா தாய் என்று பொருளாம்.
மகபூப்நகர் மாவட்டத்தில் ... வயல்காட்டில்!
மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் இந்த கோவிலையும், சிலையையும் நிறுவுகிறார் சங்கர் ராவ். இதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடந்தேறியுள்ளது.
வெண்கலச் சிலை
இந்த கோவிலில் சோனியா காந்தியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படவுள்ளது.
எதுக்காக...??
தெலுங்கானா தனி மாநிலத்தை அறிவித்ததற்கு நன்றிக்கடனாக இந்தக் கோவிலையும், சிலையையும் வைக்கிறாராம் ராவ்.
சோனியா காந்தி சாந்திவனம்
இந்தக் கோவிலுக்கு சோனியா காந்தி சாந்திவனம் என்று பெயர் சூட்டியுள்ளார் ராவ். 9 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் உருவாகிறது.
சுற்றுலாத் தலமாக்கத் திட்டம்
இந்த இடமானது பெங்களூர்- ஹைதராபாத் நெடுஞ்சாலையோரமாக அமைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த இடம் முழுவதையும் மேம்படுத்தி சுற்றுலாத் தலம் போல மாற்றும் ஐடியாவும் இருக்கிறதாம் சங்கரிடம்.
குடும்பத்தோடு போய் மாடல் சிலை தரிசனம்
சோனியா காந்தியின் முழு உருவச் சிலையின் மாதிரியாக களிமண் சிலை ஒன்று தயாராகியுள்ளது. இந்த சிலையை பொம்மபலபாடு என்ற இடத்திற்கு தனது குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்தார் சங்கர் ராவ்.
வச்சா இடிப்போம்..
ஆனால் இந்த சிலைக்கும், கோவிலுக்கும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவில் கட்டினால் இடிப்போம், சிலையையும் விட மாட்டோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
தெலுங்கானா இளைஞர்களை அவமானப்படுத்துவதா...?
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், தெலுங்கானாவுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தியாகம் செய்துள்ளனர். உயிரை விட்டுள்ளனர். அப்படி இருக்கையில் தெலுங்கானா தாய் என்று கூறி சோனியாவுக்கு கோவில் கட்டுவதும், சிலை வைப்பதும் மோசமான செயல், அவமானப்படுத்தும் செயலாகும் என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.
குஷ்பு வரிசையில்...
முன்பு தமிழகத்தி்ல குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். இந்த நிலையில் ஆந்திராவில் சங்கர் ராவ் சோனியா காந்திக்கு சிலை வைக்கிறார், கோவில் கட்டுகிறார்.
வாழ்க இந்தியா.. !