4 மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்திய கிரிக்கெட் சூதாட்டம்.. ஹைதராபாத்தில் 13 பேர் கைது
ஹைதராபாத்: நான்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்திய மிகப் பெரிய கிரிக்கெட் சூதாட்டத்தை ஹைதராபாத் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி கூறுகையில், புதன்கிழமையன்று ஹைதராபாத்தில் 3 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அங்கு, வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் பொட்டியை வைத்து சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெலுங்கனா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ரூ. 26.48 லட்சம் ரொக்கப் பணம், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 பேர் கைதானார்கள்.
இவர்கள் 4 லைன் சிடிஎம்ஏ செல்போன்கள், 9 லேன்ட்லைன் போன்கள், 6 லேப்டாப்கள், 3 டிவி பெட்டிகள், 36 சாதாரண செல்போன்களை வைத்திருந்தனர்.
இது ஒரு திட்டமிட்ட சூதாட்டமாகும். இந்த சூதாட்டக் கும்பலின் தலைவர் சத்ய பிரகாஷ் ஜிந்தால் எனப்படும் நிக்கு ஆவார். இவரை நிக்கு பாய் என்றும் அழைக்கிறாரா்கள். இவர்தான் இந்த சூதாட்டத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடத்துகிறார்.
நிக்குவின் கீழ் பல துணை புக்கிகள் செயல்படுகிறார்கள். இவர்கள் தகவல்களை செல்போன் மூலம் நிக்குவுக்குத் தெரிவிக்கிறார்கள்.
தனது வேலைக்காக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சம்பளத்திற்கு ஆட்களை வைத்துள்ளார் நிக்கு. இவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து வருகிறார்.
இந்த 13 பேர் கைது தொடர்பாக 3 காவல் நிலையங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக ரெட்டி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications