தொடரும் சீமாந்திரா போராட்டம்! இயல்பு வாழ்க்கை முடக்கம்!! ஜனாதிபதி ஆட்சி அமல்?
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2 மாதத்துக்கும் மேலாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கானா அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் 2 மாத காலமாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இதனால் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் டெல்லியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் மின்சாரம், போக்குவரத்து, கல்வித்துறை ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கெங்கும் இருள்
மின்சார வாரிய ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளதால் சீமாந்திரா பிரதேசமே இருளில் மூழ்கியுள்ளது. மருத்துவமனைகள், ரயில்சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
13 மாவட்டங்கள் இருள்
சீமாந்திராவின் 13 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்
சீமாந்திராவின் விஜயவாடா, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் விமான நிலையங்கள் தற்போது பேக்அப் மின்சாரம் மூலமே இயங்கி வருகின்றன. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது.
விஜயநகரத்தில் கண்டதும் சுட உத்தரவு
விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அத்துடன் கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே நிலைமை நீடித்தால்..
சீமாந்திராவில் தற்போதைய உச்சகட்ட போராட்டம் தொடர்ந்தும் நீடித்தால் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படும். அதைத் தவிர போராட்டத்தை ஒடுக்க வேறு எந்த ஒருவாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்து..
அதுவும் ஆந்திராவில் காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. மாநில காங்கிரஸ் அரசை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்யும் போது முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனிக் கட்சி தொடங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவார். இதனால் சீமாந்திரா விவகாரம் காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கலை உருவாக்கியுள்ளது.