காஷ்மீர் முஸ்லிம்கள் வெளியேற நாளை வரை கெடு விதித்த இந்துத்துவா அமைப்பு- உத்தரகாண்ட்டில் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற வேண்டும்; இல்லையெனில் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக கண்டனப் போராட்டமும் இன்று நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து; வாகா- அட்டாரி எல்லைகள் மூடல்; பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்; பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று பீகார் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தானுக்கு கற்பனையிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத பதிலடி தரப்படும் என எச்சரித்திருந்தார். நாட்டின் முப்படைகளும் தயார் நிலையில் வைத்திருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் முஸ்லிம்கள் நாளை காலை 10 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பான ஹிந்து ரக்ஷா தள் கெடு விதித்துள்ளது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின் போதும் உத்தரகாண்ட்டில் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருந்ததால் தற்போதைய இந்துத்துவா அமைப்பின் கெடு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்துத்துவா அமைப்பு கெடு விதித்த அறிவிப்பு வெளியான உடனே, டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் படித்து வந்த காஷ்மீர் முஸ்லிம் மாணவர்கள் உடனடியாக அம்மாநிலத்தில் இருந்து வெளியேற விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். இந்த கெடு தொடர்பாக கருத்து தெரிவித்த காஷ்மீர் மாணவர் அமைப்பினர், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற மாநில அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications