இந்திய விவசாயிகளை தடுத்த வங்க தேசத்தவர்களால் பதற்றம்
அகர்தலா: இந்தியர்கள் தங்கள் எல்லையில் விவசாயம் செய்வதாக கூறி வங்கதேசத்தினரும், அந்தநாட்டு எல்லை பாதுகாப்பு படையும் திரிபுரா மாநில மக்களிடம் தகராறு செய்ததால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கும் வங்கதேசத்துக்கும் நடுவே, 856 கிலோமீட்டர் தூரம் எல்லைக்கோடு உள்ளது. இதை ஒட்டினாற்போல உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் வங்கதேசத்து மக்களுக்கும் அவ்வப்போது தகராறு எழுந்துவருகிறது.
திரிபுரா மாநிலத்தின் மோகன்பூர் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு நீர்பாய்ச்ச சென்றபோது, வங்கதேசத்தவர்களும், அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரும் இவர்களை தடுத்து நிறுத்தி திரும்பிபோக கூறியுள்ளனர். இதற்கு இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களின் தலையீட்டின் பேரில் இந்திய விவசாயிகள் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு படை தலைமை செய்தித்தொடர்பாளர் பாஸ்கர் ராவத் கூறுகையில்:
சம்பவம் நடந்த கிராமத்தை ஒட்டி 1.2 கிலோமீட்டர் தூரத்துக்கு வங்க தேச எல்லை உள்ளது. இந்த வழியாக பாயும் தலாய் நதி தனது போக்கை மாற்றிக்கொண்டு பாயத்தொடங்கியுள்ளதால் எல்லையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் வைக்கப்பட்டிருந்த கற்கள் நதியின் வெள்ளத்தால் அகற்றப்பட்டுவிட்டன. இதற்காக இரு நாட்டு நில அளவியலாளர்களை அழைத்து வந்து நில அளவை செய்ய தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications