இந்திய-வங்கதேச மாநிலங்களை இணைத்து இஸ்லாமிய நாட்டை உருவாக்க தீவிரவாதிகள் சதி
டெல்லி: இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து, ஆயுதங்களை உற்பத்தி செய்து வங்கதேசத்தில் தாக்குதல் நடத்த செய்வது மட்டும் ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகளின் நோக்கம் கிடையாது. அதையும் தாண்டி மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைக்கும் 'கிரேட்டர்பங்களாதேஷ்'தான் அவர்கள் திட்டமாக இருந்துள்ளது.
இந்த உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை போன்றவை மே.வங்க மாநிலம் பர்த்வானில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பல திடுக்கிடும் விவரங்களை சேகரித்துள்ளன. அந்த விவரங்களை வங்கதேச அரசுக்கு வரும் திங்கள்கிழமை இந்தியா அனுப்பி வைக்க உள்ளது.
அந்த குறிப்பில் இருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு: வங்கதேசத்தின் பந்தர்பன் மற்றும் சிட்டகாங் பகுதிகளில் ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பினர் பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளனர். அந்த பயிற்சி முகாம்களில் இருந்து கிளம்பும் தீவிரவாதிகள் மேற்கு வங்கம், அசாம், மேகலயா ஆகிய மாநிலங்களிலும், வங்கதேசத்திலும் தாக்குதல்களை நடத்துவார்கள்.

மேலும், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவர்களுக்கு தேவையான ஆதரவை பெறுவதற்காக பலருக்கும் மூளை சலவை செய்து வருகிறார்கள். மூளைச்சலவைக்கு உள்ளானவர்கள் மூலமாக, மேற்கு வங்கத்தை, வங்கதேசத்தின் பல பகுதிகளுடன் இணைப்பதற்கும், அதன்பிறகு வட கிழக்கு மாநிலங்களை அதனுடன் இணைப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை இந்தியா பிரித்து தனிநாடாக்கியதற்கு பழிவாங்க தீவிரவாதிகள் இந்தியாவை துண்டாட நினைக்கிறார்கள். மேலும் வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய நாடு அமைக்கப்பட்டதை போல இந்த பிராந்தியத்திலும் தனி நாடு அமைக்க கிளம்பியுள்ளனர்.
இந்தியாவில் கிளை அமைக்கப்போவதாக அல்கொய்தா எச்சரித்துள்ளதையும், இதனோடு இணைத்து பார்க்க வேண்டியுள்ளது. ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் மற்றும் இந்தியாவிலுள்ள தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து அல்கொய்தா தன்னை பலப்படுத்த நினைக்கிறது. எனவே வங்கதேச எல்லையில் இரு நாடுகளும் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தீவிரவாதிகள் நடமாட்டம் தடுக்கப்பட வேண்டும்.
இதுவரை கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அளித்த வாக்குமூலங்களின்படி, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஸ்திரமில்லாத நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமிய நாடு அமைப்பதாக கூறிக்கொண்டு, தீவிரவாத செயல்களை நியாயப்படுத்தி வருவது தெரியவருகிறது.
கிரேட்டர் வங்கதேசத்தை அமைக்க ஜமாத்-உல்-முஜாகிதீன் மற்றும் அல்கொய்தா இணைந்து செயல்பட தொடங்கியுள்ளன. அல்கொய்தா பாகிஸ்தானில் எளிதாக இயங்க முடிவதால் இந்த பிராந்தியத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பு வங்கதேசத்திற்கு கிடைக்க பெற்றதும், இரு நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உளவுத்தகவல்களை எப்படி சேகரிப்பது என்பதுகுறித்து முடிவெடுக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications