நல்ல காலம் பொறக்குது.. 50 நாளில் நல்ல காலம் பொறக்குது.. மீண்டும் சொல்கிறார் மோடி
ரூபாய் நோட்டு பிரச்சனை 50 நாளில் முடிவிற்கு வந்து இயல்புநிலை திரும்பும் என்று மோடி கூறியுள்ளார்
காந்திநகர்: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்னர் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை எல்லாம் 50 நாட்களில் தீர்ந்துவிடும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து ஒரு மாதம் ஆகிறது. என்றாலும், இன்னும் பொதுமக்கள் படும்பாடு தீரவில்லை. வங்கி வாசலில் கூட்டம் இன்னும் இருக்கிறது. இன்னும் பல ஏடிஎம்கள் திறக்கப்படவில்லை. ஆனாலும் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் 50 நாட்களில் தீர்ந்துவிடும் என்று பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், பனஸ்கந்தாவில் ரூ.350 கோடி மதிப்பில் உருவாகியுள்ள பாலாடை கட்டி உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாகவும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஐம்பதே நாள் காத்திருங்கள்
ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் 50 நாட்களுக்கு நீடிக்கும். இந்த பிரச்சினை இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், என் கணிப்புப்படி, 50 நாட்களுக்கு பிறகு படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பிவிடும் என்று நினைக்கிறேன். 50 நாட்களுக்கு பிறகு, இந்தப் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதை நீங்களும் பார்ப்பீர்கள்.

நாடாளுமன்றத்தில் பேசமாட்டேன்
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிக்கள் அனுமதி கொடுக்க மறுக்கின்றன. எனவேதான், நான் மக்கள் மன்றத்தில் பேச முடிவு செய்துள்ளேன். நாடாளுமன்றம் செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிப்பது இல்லை. ரூபாய் நோட்டு செல்லாது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச தயாராக இருக்கிறார் என வாக்குறுதி அளித்த பின்னரும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

மக்கள் ஆதரவு
ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பினால் அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. அவர்கள் செய்யும் பொய் பிரசாரம் நாடாளுமன்ற விவாதத்தில் எடுபடாமல் போய் விடும். ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் நாட்டு மக்கள், அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்
பயங்கரவாதத்தின் முதுகெலும்பையும், நக்சலைட்டுகளின் செயல்பாடுகளையும் இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை முறித்து விட்டது. கள்ள நோட்டுகள்கள் பயங்கரவாதிகளுக்கு நாசவேலைகளுக்கு நிதியாக பயன்படுகிறது. எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன்.

வரிசையில் நிற்பது நாட்டுக்கு நல்லது
ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கைக்கு பின்னர், 100 ரூபாய் நோட்டுக்கு முக்கியத்துவம் கூடி இருக்கிறது. வங்கிகளுக்கு வெளியேயும், ஏடிஎம் மையங்களுக்கு வெளியேயும் பணத்துக்காக மக்கள் வரிசைகளில் நிற்கிறார்கள். இது நாட்டுக்கு நல்லது. ரொக்க பணமில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் திட்டம். அதற்காக நீங்கள் என்னை ஆதரிக்க தயார் என்றால், செல்போனில் உங்களுக்கு வசதிகளை வாரி வழங்குவதற்காக வங்கிகள் வரிசையில் நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications