தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்கியதில் 3 பேர் பலி
ட்ரேல் : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் ட்ரேல் பேருந்து நிலையம் அருகே போலீஸ் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர். 4 பொதுமக்கள், 10 காவல்துறையினர் மற்றும் 7 சிஆர்பிஎஃப் போலீசாரும் இதில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் 11.45 மணியளவில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சர் நயீம் அக்தர் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வரவிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் தீவிரவாத தாக்குதலில் இருந்து அமைச்சர் தப்பியுள்ளார்.