எம்எல்ஏவை காணவில்லையா.... காங்கிரஸ் தலைவர்களுக்கு பிபி எகிற வைத்த நிமிடங்கள்!
ஹைதராபாத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த எம்எல்ஏ காணாமல் போனதால், காங்கிரஸ் தலைவர்கள் பதற்றமடைந்தனர்.
Recommended Video

ஹைதராபாத்: பெங்களூரில் இருந்தால் விலைக்கு வாங்கப்படலாம் என்று ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவர் திடீரென காணாமல் போனது கட்சி மூத்த தலைவர்களை பதற வைத்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்றார்.

பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் 15 நாள்கள் அவகாசம் அளித்தார். ஆனால் இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் அளித்த அவகாசத்தில், தங்களுடைய எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்யும் என்று காங்கிரஸ் மற்றும் மஜத, அவர்களை ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் மற்றும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.
அங்கு சென்ற உடன், பாஜகவினர் தொந்தரவு செய்யக் கூடாது என்று, எம்எல்ஏக்களின் மொபைல்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாங்கி வைத்தனர்.
அவ்வப்போது,. அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருக்கிறார்களா என்று எண்ணிப் பார்த்தனர். ஆனால், நேற்று காலையில் அவ்வாறு எண்ணும்போது ஒருவர் குறைந்தார்.
பதற்றமடைந்த கட்சித் தலைவர்கள், ஹோட்டலில் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தனர். யாராவது வெளியே சென்றுவிட்டார்களா என்று செக்யூரிட்டிகளிடம் விசாரித்தனர்.
ஆனால் எங்கு தேடியும் ஒரு எம்எல்ஏவை காணவில்லை. அப்போதுதான், அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில், அந்த எம்எல்ஏ சுகமாக குளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகே காங்கிரஸ் தலைவர்களுக்கு நிம்மதி வந்தது.












Click it and Unblock the Notifications