நடந்து முடிந்துள்ள 4 கட்ட வாக்குப்பதிவு வெற்றிமுகத்தை காட்டுகிறது... மோடி பலே பேச்சு
முசாபர்பூர்: கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான தங்களது வேலையில் வேகம் குறையவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகாரில் இருந்து 40 எம்.பிக்கள் மக்களவைக்கு அனுப்பப்படுவர், 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 21 இடங்களில் வாக்குப்பதிவு மே 6, மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5-ம் கட்டமாக நடைபெறும் தேர்தலையொட்டி, பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், நமது நாட்டில் தீவிரவாதம் வளர தொடங்கினால் எந்த மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது எனவும் அதனால் தான் தங்கள் அரசு தீவிரவாததிற்கு எதிராக தீவிரமாக செயல் பட்டுவருவதாக கூறினார். மேலும், இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய இருப்பிடத்திற்கே சென்று தாக்குவோம் என்றார்.
கல்லோ மண்ணோ எதை கலந்து ரசகுல்லா கொடுத்தாலும் அது எனக்கு மகா பிரசாதம்.. மம்தாவுக்கு மோடி கவுன்ட்டர்!
தனக்கு எதிராக கூட்டணி அமைத்திருபவர்கள் பாகிஸ்தான் பெயரை கேட்டாலே நடுங்க கூடியவர்கள் என்றும், அவர்களால் ஒரு காலத்திலும் தீவிரவாதத்தை தடுக்க முடியாது எனவும் மோடி விமர்சித்தார்.
அதேபோல், ஊழல் செய்யவும், ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கவும் தனக்கு எதிராக அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்ந்திருப்பதாக மோடி விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் தோல்வியை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல் காட்டுகின்றன என்று பேசிய மோடி, மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலில், தங்களது தோல்வியின் அளவை தீர்மானித்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
மத்திய அரசின் திட்டங்களை விளக்கி கூறிய மோடி, கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான தங்களது வேலையில் வேகம் குறையவில்லை என்றும் குறிப்பிட்டார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.