சட்டவிரோத பணப் பரிமாற்றம்.. லலித் மோடி நேரில் ஆஜராக அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்...
டெல்லி : ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லண்டனில் உள்ள லலித் மோடிக்கு இந்திய அமலாக்கப்பிரிவு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் உதவியதாக கடந்த மாதம் எழுந்த குற்றச்சாட்டு பா.ஜ.க. வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சோனியாவின் மகள் பிரியங்காவும் அவரது கணவர் ராபர்ட் வதேராவும் தன்னை லண்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்ததாக லலித் மோடி தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். வருண்காந்தி தன்னை சந்தித்த போது இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தனது பெரியம்மா (சோனியா) மூலம் தீர்வு காணலாம் என்றும் அதற்கு பெரியம்மா (சோனியா) ரூ.384 கோடி கேட்கிறார் என்று வருண்காந்தி கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, லலித்மோடி மீதான அமலாக்கப்பிரிவின் பிடி மேலும் இறுகுகிறது. அவர் மீதான வழக்குகளில் ‘ஃபெமா' சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி அன்னியச் செலவாணி மோசடியுடன் ‘ஃபெமா' சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளின் உதவியை இந்திய நீதிமன்றம் நாடமுடியும். அதன் மூலம் லலித் மோடியை விசாரணைக்கு அழைத்து வர முடியும்.
லலித் மோடி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ரூ.425 கோடி ஊடக உரிமம் வழங்கியதில் ரூ.125 கோடி ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்த நிதிமுறைகேடு ரூ.2,200 கோடி என குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் உள்ள வழக்குகள் ஆகும்.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லண்டனில் உள்ள லலித் மோடிக்கு இந்திய அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறும் லலித் மோடிக்கு அமலாக்கப்பிரிவு கெடு விதித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின்கீழ் லலித் மோடி தவிர இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். முன்னாள் நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.