வெடித்த பிரச்சனை.. காஷ்மீரில் நுழைந்த பாக். வெளியுறவு அமைச்சர்.. ஜி20 மாநாடு கூட்டத்துக்கு எதிர்ப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமை இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அதிகாரிகள் பலர் வருகை தர இருக்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று ஜம்மு காஷ்மீரில் தொடங்குகிறது. தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷமீர் சர்வதேச மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது.
இதில் 60க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
அதேபோல இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராணுவம், ஸ்ரீநகர் போலீஸ், சிஆர்பிஎஃப், தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை கமாண்டோக்கள் என பலரும் ஜபர்வன் மலைத்தொடர் முதல் தால் ஏரி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர ட்ரோன் எதிர்ப்பு படை, தனியாக வாகன சோதனை சாவடிகள், வெடிகுண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் என பாதுகாப்பு டைட் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. அந்நாட்டை பொறுத்த அளவில் ஜம்மு காஷ்மீரில் இந்த மாநாட்டு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்தியா எடுத்த முடிவு, தன்னிச்சையான நடவடிக்கை என்று கருதி வருகிறது.

எனவே இந்த கூட்டத்தில் அந்நாட்டின் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டத்தை மீறுவதாக கூறியுள்ளார்.
எனவே தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்துள்ளார். இதற்கு முன்னர் இம்மாத தொடக்கத்தில் கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றிருந்தார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், துணை ராணுவம், ஆர்.பி.எஃப், கடற்படை என பாதுகாப்பு பல அடுக்காக பலப்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வரை காஷ்மீரையொட்டிய பகுதியில் ஊடுருவல் முயற்சி நடந்தது. இதனை பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக முறியடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications