இது சர்வாதிகார நாடல்ல... தனியறையில் ஆபாசப்படம் பார்ப்பதை தடுக்க முடியாது!
டெல்லி : ஆபாச படம் பார்ப்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆபாசப்படங்களை பார்ப்பதும், அதை பகிர்ந்துகொள்வதும் ஜாமீனில் விட முடியாத கடும் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.

அந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விஷயத்தில், மத்திய அரசுதான் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாதாடினார்.
அப்போது அவர், நமது நாடு சர்வாதிகார நாடு அல்ல. மக்களின் தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட விரும்பவில்லை. கலாசார காவலராக செயல்படவும் விரும்பவில்லை.சிலர் தங்கள் அறையில் தனியாக ஆபாசப்படம் பார்க்க விரும்புகிறார்கள். அதை நாம் தடுக்க முடியுமா?
அதே சமயத்தில், குழந்தைகளின் ஆபாசப்படங்களுக்கு கண்டிப்பாக தடை விதிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று வாதாடினார்.
இந்த பிரச்சினை குறித்து வேறொரு நாளில் விரிவாக விவாதிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications