காவிரி: சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி.. சிறப்பு சட்டசபையை கூட்டுகிறது கர்நாடகா !
பெங்களூர்: காவிரி நிதி நீர் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மாட்டோம் எனக் கூறி, அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் சிறப்பு சட்டசபையை கூட்டவுள்ளது கர்நாடகா அரசு.
காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து பெங்களூர் விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த செப். 29 ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, இரு மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், வரும் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. ஏற்கனவே 2007 ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று நாங்கள் கூறியிருந்தோம். இது தொடர்பான முக்கிய வழக்கு வரும் 18 ம் தேதி 3 அமர்வு கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட பெஞ்சு தீர்ப்பு அளித்திருப்பது குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்கிறோம். காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காவிரியில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே காவிரி நிதி நீர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு, கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது. உச்சநீதிமன்ற உத்தரவை அரசுகள் மதித்தே நடக்க வேண்டும். நீதிமன்ற மாண்பை சீர் குலைக்க கூடாது. கூட்டாட்சி தத்துவம் கொண்ட இந்தியாவில், எந்த ஒரு மாநிலமும், சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்காமல் இருக்க முடியாது. மற்றொரு மாநிலத்திற்கு எதிராக சண்டையிட சுப்ரீம்கோர்ட்டை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் நாளை சிறப்பு சட்டசபையை கூட்ட உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications