“ஆக்ஷன் மோடில்” மம்தா பானர்ஜி.. மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை! கொந்தளித்த பாஜக
கொல்கத்தா: பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் திரையிடலை தமிழ்நாடு திரையரங்குகள் நிறுத்தி இருக்கும் சூழலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த படத்தை மாநிலத்தில் தடை செய்வதாக அறிவித்து உள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி 2வது நாளில் இருந்து இப்படம் திரையிடப்படாது என்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன.

இந்த நிலையில் மேற்கு வங்க தலைமை செயலகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் மம்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கும் திரையரங்குகளில் காட்சிகள் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள், வன்முறைகளை தவிர்க்கவும் இந்த படத்தை தடை செய்வதாக அவர் அறிவித்து உள்ளார்.
"காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட வரிசையில் மேற்கு வங்கம் தொடர்பாகவும் ஒரு படத்தை தயாரிக்க பாஜக நிதி அளித்து உள்ளது." என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய சில நிமிடங்களில் இந்த தடை அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் மேற்கு வங்க அரசின் இந்த முடிவுக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் கண்டனம் தெரிவித்து உள்ளார். உண்மைகளை பார்க்காமல் மம்தா பானர்ஜி கண்களை மூடிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷாவும், மேற்கு வங்கத்தில் படம் தடை செய்யப்பட்டதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அறிவித்து உள்ளார். அவர் தெரிவித்து இருப்பதாவது, "மம்தா பானர்ஜி தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதித்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். சட்டப்படி இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்." என்று கூறி உள்ளார்.

சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் அடா சர்மா, பிரணவ் மிஸ்ரா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தில் பிற மதங்களை சேர்ந்த 32 ஆயிரம் கேரள பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இன்றி இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறி கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்துக்கு தடைகோரி பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. தமிழ்நாட்டில் திரையரங்குகள் முன்பாக நாம் தமிழர், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.












Click it and Unblock the Notifications