கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது தென் இந்தியாவின் 'கும்பமேளா'.. லட்சக்கணக்கில் குவியும் சமண துறவிகள்
Recommended Video
பெங்களூர்: தென் இந்தியாவின் கும்பமேளா என்று அடைமொழியோடு அழைக்கப்படும், கர்நாடக மாநிலம், ஹாசன் அருகேயுள்ள ஷ்ராவணபெலகோலா பகுதியிலுள்ள பகவான் பாகுபலி சுவாமியின் மகாமஸ்தாபிஷேக விழா தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவிலுள்ள இந்த பகுதியில் 7ம் தேதி விழா தொடங்கியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார். வரும் 26ம் தேதி வரை மகாமஸ்தாபிஷேக விழா நடைபெறுகிறது.
இது உலகமெங்கிலும் உள்ள சமணர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாகும். தென் இந்தியாவின் கும்பமேளா என்று கூறுமளவுக்கு, சமண மதத்தை சேர்ந்த துறவிகளும், பக்தர்களும் பல லட்சக்கணக்கில் இங்கு கூடுவார்கள்.
பிரமாண்ட சிலை
இங்குள்ள விந்திய கிரி மலையில், நிர்வாண நிலையில் காணப்படும் பாகுபலி கோமண்டீஸ்வரின் 57 அடி உயர பிரமாண்ட சிலைக்கு பல வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். இதில் பங்கேற்பதை ஒரு பாக்கியம் போல கருதி சமண மதத்தை சேர்ந்த பக்தர்கள் அங்கு குவிகிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த விழா நடைபெறும் என்பதால், பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு இங்கு குவிகிறார்கள்.
நூற்றாண்டுகள் கடந்த சிலை
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த பிரமாண்ட பாகுபலி சிலை, 981வது ஆண்டில் உருவாக்கப்பட்டதாம். இதை கர்நாடக மக்கள் கோமண்டீஸ்வர் என்று அழைத்து வருகிறார்கள். விழா நடைபெறும் 20 நாட்களும், மதம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும்.
பக்தர்கள் பரவசம்
65 வயதாகும், கீம்சந்த் கரிவால் ராஜஸ்தானில் இருந்து 2500 கிமீ பாதயாத்திரையாக 6 மாதங்கள் பயணித்து ஷ்ராவணபெலகோலா வந்து சேர்ந்துள்ளார். 1967ம் ஆண்டு தனது டீன்ஏஜ் வயதில் தந்தையுடன் முதன் முறையாக ஷ்ராவணபெலகோலா வந்த அவர், பிறகு 12 வருடங்களுக்கு ஒருமுறை பாதயாத்திரையாக வருவதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இதுபோன்ற பல பக்தர்களை இங்கே காண முடியும்.
விரிவான ஏற்பாடுகள்
மகாமஸ்தாபிஷேக விழாவை முன்னிட்டு 2018, பிப்ரவரி 7 முதல் 26ம் தேதிவரை பெங்களூரு (யஷ்வந்த்பூர்), ஹாசனில் இருந்து ஷ்ராவணபெலகோலா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கர்நாடக அரசு சிறப்பு பஸ்களை ஏராளமாக இயக்குகிறது.