விவசாயிகள் போராட்டத்திற்கு பின் நின்ற இளைஞர்.. புரட்சியை உருவாக்கிய விஜு கிருஷ்ணன் யார்?
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் அங்கு நடக்கும் பள்ளி பொது தேர்வுகள் பாதிக்க கூடாது என்று இரவில் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பின் கேரளாவை சேர்ந்த விஜு கிருஷ்ணன் என்ற முக்கியமான இளைஞர் ஒருவர் இருக்கிறார். 44 வயது நிரம்பிய இவர்தான் இவ்வளவு பெரிய போராட்டத்தின் மூல காரணம் ஆவார்.
6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று மும்பை வரை வந்து இருக்கிறது. 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட்டார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது.

யார்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த கேரளாவை சேர்ந்த விஜு கிருஷ்ணனுக்கு அப்போதில் இருந்தே அரசியல் ஆர்வம் அதிகம். இதன் காரணமாக பல்கலைக்கழக தேர்தலில் நின்று மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் அகில இந்திய கிசான் சபாவில் துணை செயலாளராக இருக்கிறார்.

கட்சி
அதேபோல் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மேல்மட்ட குழுவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் அரசியல் பிரிவு ஆசிரியராக இருந்துள்ளார். அதன்பின் அந்த வேலையைவிட்டுவிட்டு முழு நேர மக்கள் பணியில் இணைந்து இருக்கிறார்.

அப்போதே அப்படி
இவர் ஜே.என்.யூ கல்லூரியில் படித்த போதே நிறைய போராட்டங்கள் நடத்தி இருக்கிறார். அப்போதே மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரி கட்டணத்திற்கு எதிராக போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இப்போது அங்கு வாங்கப்படும் குறைவான கட்டணத்திற்கு இவர் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெண்களுக்கு எதிராக கல்லூரியில் நடக்கும் வன்முறையை பார்த்து, பாலியல் வன்முறைக்கு எதிராக இயக்கத்தை கல்லூரியிலேயே உருவாக்கினார்.

காரணம்
இந்த போராட்டத்திற்கு மிக முக்கியமான காரணங்களில் இவரும் ஒருவர். விவசாயிகளை பின் நின்று நேர்வழியில் இயக்கியதில் இவரின் பங்கு அதிகம் இருக்கிறது. இந்த வித்தியாசமான போராட்ட முறையை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்ததும், அதை வெற்றி பெற வைத்ததிலும் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது,.

பேசினார்
அகில இந்திய கிசான் சபாவில் துணை செயலாளராக இருக்கும் இவர், பேரணிக்கு முன் விவசாயிகளிடம் சென்று பேசி இருக்கிறார். போராட்டத்தை எப்படி அமைதியாக நடத்த வேண்டும் என்று நிறைய விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் எடுத்துக் கொடுத்தது மட்டுமே இவர் நடத்திக் காட்டியது விவசாயிகள்தான்.

கெத்து பேட்டி
விஜு கிருஷ்ணன் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ''இதை அரசியலாக்க பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க விவசாயிகள் செய்த போராட்டம். இதில் கட்சிகள் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. நாங்கள் விவசாயத்திற்கு எதிராக பேசினால் இவர்கள் எங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications