2 இளைஞர்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரம்.. மணிப்பூரில் பாஜக அலுவலகத்தை மொத்தமாக எரித்த வன்முறை கும்பல்
இம்பால்: மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்தை ஒரு வன்முறை கும்பல், நேற்று (புதன்கிழமை) தீ வைத்து எரித்தது.
முன்னதாக மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தால் ஆத்திரம் அடைந்த பாஜக அலுவலகத்தை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எரிந்ததாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். அங்கு பட்டியல் இனத்தவர்களா மெய்தி மக்களை சேர்க்க குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மே மாதம் 3ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது.
அந்த மோதல் என்பது வன்முறையாக உருவாகி தொடர்ந்து நீடித்து வருகிறது. குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குக்கி, மெய்தி என இருதரப்பினரும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்துவதால் பதற்றமாக உள்ளது. மணிப்பூர் போலீசார், மத்திய படை போலீசார், ராணுவம் ஆகியவை நேரடியாக இறங்கி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் கூட வன்முறை மட்டும் நிற்கவே இல்லை. கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை 180க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் மெய்தி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மாயமானார்கள். மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் (வயது 20), ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (17) ஆகியோர் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர். பின்னர் இருவருமே கொல்லப்பட்டனர். குக்கி குழுவினரால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து மணிப்பூரில் பதற்றம் உச்சகட்டமானது. பலரும் புதன்கிழமை போராட்டத்தில் இறங்கினர். இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளிகளை பிடிப்பதில் விரைவில் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்,மணிப்பூர் மாநில முதல்வர் என் பிரேன் சிங் உறுதி அளித்தார்.
மேலும் மணிப்பூரின் முதல்வர் பிரேன் சிங் மாணவர்கள் இரண்டு பேர் கடத்தி கொல்லப்பட்ட விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார். இது தொடர்பாக பிரேன் சிங் கூறுகையில்,"கடந்த 1-1.5 மாதங்களாக இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை. அமைதி திரும்பியுள்ளது. ஜூலை 3 முதல் மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காணவில்லை . நாங்கள் அவர்களைக் கண்டுபிடிக்க முயன்றோம். இந்நிலையில் காணாமல் போன இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இது ஒரு சோகமான சம்பவம், குக்கி தீவிரவாதிகள் செய்தது மிக மோசமான குற்றம் . இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று என்னை அழைத்து சிறப்பு இயக்குனருடன் சிபிஐ குழுவை அனுப்புவதை உறுதி அளித்தார். இன்று (நேற்று) மதியம் இங்கு வந்தேன். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதை கண்டிப்பாக உறுதி செய்வோம் என்பதை மணிப்பூர் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.
இதனிடையே மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட விவகாரம் வெளியே தெரியவந்ததால், ஆத்திரம் அடைந்த சிலர், மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலக வாயிலையும் தகர்த்து, ஜன்னல்களை உடைத்து, வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியையும் சேதப்படுத்தினார்கள். பின்னர் அந்த அலுவலகம் முழுவதையும் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பதற்றமான நிலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மணிப்பூரில் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது.கடந்த இரண்டு நாட்களில் 65 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு இம்பாலின் இரண்டு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications