அந்த 4 பேரில் ஒருவர்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகாய்.. யார் இவர்?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய்.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய்.
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
தீபக் மிஸ்ரா வேறு யாருடைய பெயரையும் பரிந்துரை செய்யவில்லை. இதனால் கண்டிப்பாக ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக தேர்வாக வாய்ப்புள்ளது.
தலைமை நீதிபதியாக இருந்தார்
நீதிபதி ரஞ்சன் கோகாய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவர் 1978லேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டார். 2001ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் பஞ்சாப் நீதிமன்றத்திலும், ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் நியமிக்கப்பட்டு, பின் அங்கேயே தலைமை நீதிபதி ஆனார். அதன்பின் 2012ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.
வடகிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்
இவர் அசாம் மாநிலத்தில் பிறந்தவர். வடகிழக்கு பகுதியில் இருந்து வந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக போகும் நபர் இவர்தான். தற்போது உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு அடுத்து நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி இவர்தான். அசாம் மாநில முன்னாள் முதல்வர் கேஷப் சந்திர கோகாயின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் கொலை வழக்கு
இவர் குறிப்பிடத்தக்க சில வழக்கு விசாரணையில் நீதிபதியாக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின், சிபிஐ தரப்பு வாத விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தார். குஜராத் அரசுக்கு எதிராக ரிலையன்ஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தார். அதேபோல் பல முக்கியமான வழக்குகளையும் இவர் விசாரித்துள்ளார்.
ஜோசப் நியமனத்தில் குரல் கொடுத்தவர்
கடந்த சில நாட்களுக்கு முன் நீதிபதி ஜோசப் உச்ச நீதிமன்றத்திற்கு பணி உயர்வு பெற்றார். ஆனால் முதலில் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது கொலிஜிய உறுப்பினராக இருந்த ரஞ்சன் கோகாய், இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஜோசப் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதற்கு இவரும் முக்கிய காரணம். நீதித்துறையில் அரசு தலையிட கூடாது என்று அப்போதே இவர் குறிப்பிட்டார்.
அந்த நான்கு நீதிபதிகள்
அதேபோல், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக குரல் கொடுத்த நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி மதன் லோகுர், நீதிபதி குரியன் ஜோசப், நீதிபதி செல்லமேஸ்வர் ஆகிய நால்வரும் சேர்ந்து சில வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். வழக்கு ஒதுக்கீட்டில் நேர்மையான முறை பின்பற்றப்படவில்லை என்று இவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். தற்போது அவரே தலைமை நீதிபதி ஆக இருப்பது குறிப்பித்ததக்கது.