திடீர்னு நடந்தது இல்ல! கதறும் ஜோஷிமத் மக்கள்! ஏற்கெனவே 3 முறை.. முதல்வருக்கு கடிதம் எழுதியது அம்பலம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக சுமார் 5,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் சில வீடுகளில் விரிசல்கள் விழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து ஏற்கெனவே முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மூன்று முறை உள்ளூர் மக்கள் கடிதம் எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலை அடிவாரத்தில் இந்த ஜோஷிமத் நகரம் அமைந்திருக்கிறது. மலையடிவாரத்தில் அமைந்திருப்பதால் இங்கு வேளாண் தொழில் பெரிய அளவுக்கு நடப்பதில்லை. மாறாக இந்நகரின் வருவாய் சுற்றுலா பயணிகளிடமிருந்துதான் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் இங்கு குவியத் தொடங்கும் சுற்றுலாப்பயணிகள் அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில்தான் வெளியேறுவார்கள்.
இவ்வாறு இருக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது. ஒருபுறம் வீடிழந்தவர்கள் அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். மறுபுறம் வீடு இருப்பவர்கள் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு காரணமாக வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகளும் இந்த நிலச்சரிவு செய்தியை கேட்டு முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.

கடிதம்
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஏதோ நேற்று அல்லது நேற்று முன்தினம் திடீரென நடந்தது கிடையாது என தற்போது தெரியவந்துள்ளது. ஜோஷிமத் நகரையொட்டி தேசிய அனல் மின் கழகம் (NTPC) தனது கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணியின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் பணியும் நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போதுதான் இங்குள்ள வீடுகளில் லேசான விரிசல் விழுந்திருக்கிறது. சுரங்கம் தோண்டுவதற்காக வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த அதிர்வுகள் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டன.

சுரங்கம்
இதனையடுத்து உள்ளூர் மக்கள் இது குறித்து அரசின் அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். முதலமைச்சருக்கு கூட கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் இந்த கட்டுமானப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அப்போதும் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்திருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் விரிசல்கள் விழ தொடங்கியுள்ளன. எனவே மக்கள் இரண்டாவது முறையும் முதலமைச்சர் உட்பட பல அதிகாரிக்களுக்கு கடிதம் எழுதினர். அப்போது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மூன்றாவது முறை
இப்படியே போய்க்கொண்டிருக்கையில் சில நாட்கள் கழித்து அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில் இதே போல கட்டிடங்கள் விரிசல் விழத் தொடங்கின. மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மூன்றாவது முறையும் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் வழக்கம் போல இந்த கடிதத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இறுதியாகத்தான் விரிசல் வலுவடைந்து கட்டிடங்கள் பலமாக சேதமடைய தொடங்கியுள்ளது. எனவே மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

என்டிடிவி
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் என்டிடிவி செய்தி ஊடகம் கேள்வியெழுப்பி இருக்கிறது. இதனை ஆட்சியர் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் ஹிமான்ஷு குரானா கூறுகையில், "ஆம் எனக்கும் முதலமைச்சருக்கும் இது குறித்த கடிதம் ஏற்கெனவே வந்திருந்தது. எனவே நாங்கள் ஒரு குழுவுடன் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க கடந்த டிசம்பரில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் விரிசல் இருந்தது. ஆனால் இந்த விரிசலுக்கு என்ன காரணம் என்பது முறையாக தெரியாது. அவர்கள் NTPC-ன் கட்டுமான பணிகள் மீது குற்றம்சாட்டினர்.

ஆய்வு
இருப்பினும் முறையான ஆய்வு இல்லாமல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நாங்கள் ஆய்வுக்கு தயாரானோம். அதற்குள் இச்சம்பவம் நடந்துவிட்டது. மட்டுமல்லாது NTPC மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் உரிய வழிக்காட்டு நெறிமுறைகளின்படிதான் மேற்கொள்ளப்பட்டன" என்று கூறியுள்ளார். NTPC மட்டுமல்லாது மற்ற சில கட்டுமானப்பணிகளும் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த நிலச்சரிவுக்கான சரியான காரணத்தை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications