'மக்களின் ஜனாதிபதி'யாக போற்றப்பட்ட அப்துல் கலாம்
டெல்லி: ராக்கெட் மேன் உள்பட பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் ஒட்டு மொத்த தேசம் அப்துல் கலாமுக்கு வைத்த செல்லப் பெயர் மக்களின் ஜனாதிபதி.
எளிமை, ஆடம்பரமின்மை, மக்களோடு மக்களாக கலந்து உலவியது, பாதுகாப்பு கெடுபிடிகளை துச்சமென மதித்தது என மக்களுக்கான ஜனாதிபதியாக உயர்ந்து நின்றவர் அப்துல் கலாம்.
குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் அவர் எளி்மையின் மனிதராக இருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் தனது குடும்பத்தினர் யாரையும் சேர்க்காமல், எளிமையான ஜனாதிபதியாக வலம் வந்தார். எங்கு போனாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத குடியரசுத் தலைவராக மக்கள் அவரைப் பார்த்து வியந்தனர்.
மாணவர்களின் செல்லப் பிள்ளையாக, மக்களின் மதிப்புக்குரிய தலைவராக வலம் வந்தவர் கலாம்.
இவரைப் போன்ற தலைவரை இனியும் பார்க்க முடியுமா என்று மக்கள் வியந்து போகும் அளவுக்கு தனது பதவிக்கும் கெளரவம் சேர்த்துக் கொடுத்தவர் கலாம்.
கலாம் போன்றவர்கள் ஜனாதிபதியாக மட்டுமல்லாமல் பிரதமராகவும் வந்தால்தான் இந்தியா உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும் என்று மக்கள் ஏங்கித் தவித்தனர்.
கனவு காணுங்கள், அது உங்களது உயர்வுக்கு வழிகாட்டும் என்று கூறி வந்தவர் கலாம். வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்காக அவரும் கனவு கண்டார்.
இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கியப் பங்காற்றி உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் அப்துல் கலாம்
உயரிய லட்சியம், தெள்ளிய சிந்தனை, தீர்க்கதரிசன பேச்சு, திட்டமிடல் என்று ஒரு அருமையான தலைவருக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்ட ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் மக்களின் அன்பைப் பெற்ற ஒரே தலைவர் அப்துல் கலாம்தான்.