புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
டெல்லி: ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதிமுதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதிலா புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும் போஸ்ட் ஆபிஸ்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாட்டில் பெரும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை
கிடைத்த புதிய 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாயினர். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த பணமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

புதிய ரூ.1000 நோட்டுகள்
பணமதிப்பு ரத்து நடவடிக்கை நடைமுறைக்கு வந்து 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போத பணத்தட்டுப்பாடு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

ஜனவரியிலேயே வந்திருக்கும்
அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலேயே புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளிட முடிவு செய்திருந்ததாகவும் பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை நீக்க 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணியால் புதிய 1000 ரூபாய் நோட்டை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அச்சிடும் பணி தொடக்கம்
புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி தொடங்கி விட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய 1000 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகள் குறைந்துவிடும்
புதிய 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தால் சில்லறை தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறைந்துவிடும் என்றும் ரிச்ரவ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.9.92 லட்சம் கோடி புழக்கம்
ஜனவரி மாதம் வரை 9.92 லட்சம் கோடி ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெறப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ரூபாய் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவகாசம்
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications