சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்
சபரிமலை: மண்டல-மகர விளக்கு பூஜைக்காக, புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. நேற்று பிற பூஜைகள் நடைபெறாத நிலையில், இன்று முதல் வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும்.
சீராய்வு மனு மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி சில நாட்களேயாகியுள்ள நிலையில், நடை திறக்கப்பட்டு உள்ளதால், சபரிமலையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தீபாராதனை
மேல் சாந்தி, கற்பூர ஆரத்தி காண்பித்து, கதவு திறக்கப்பட்டதும், கூடியிருந்த பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்கள் முழங்க ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதையடுத்து, 18ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. பின்னர் 18ம்படிக்கு கீழே காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு நேற்றைய தினம் பிற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பூஜைகள்
17ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அரிவராசனம்
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகையை பொறுத்து நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படும். இதன்பிறகு டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

பாதுகாப்புகள்
கடந்த முறையை போல இந்த வருட சீசனில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கபடவில்லை. அனைத்தும் அமைதியான முறையில் இருப்பதாக சபரிமலை தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications